9/12/2012

உலகைக் குலுக்கிய புகைப்படங்கள் !

உலகைக் குலுக்கிய புகைப்படங்கள் !


நிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படங்களை இங்கே அதன் சம்பவங்களோடு காண்போம்...!

உலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் !

சேகுவேரா என்ற மனிதன் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் 'எல்லா நாடும் என் தாய் நாடே..  அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே 'என்ற சே'வின்  தாழாத மனித குணத்தால் தான். அக்டோபர் 9 ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர்  உலக நாளேடுகளில் யாவும் தவறாமல் சே'வின் மரணப்படத்தையே தம் முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்தியது.

போரை நிறுத்திய சிறுமியின் கதறல் !

ஜூன் 8,1972. வியட்நாம் போரில் கடுமையான தாக்குதல் நடந்த கொண்டிருந்த போது 'ட்ராங் பாங்' என்ற பகுதியில் குண்டு வெடிக்கையில், அதிலிருந்து தப்பி வந்தவளாய் கிம் புக் என்ற சிறுமி நிர்வாண கோலத்தில் கதறிக்கொண்டே ஓடி வர, அப்படமே அப்போரை உலக நாடுகள் தடுத்து நிறுத்த காரணமாயிற்று.

வறுமை உடலை கொத்த நின்ற கழுகு

1994-ம் ஆண்டு சூடானின் கடுமையான வறுமையில் மக்கள் பட்டினியால் மடிந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 'சாக இருந்த குழந்தையை கொத்திச் சென்றிட காத்திருக்கும் கழுகை' ஒரு புகைப்படம் எடுத்தார் கெவின் கார்டர் என்னும் புகைப்படக்காரர். இன்றும் வறுமை என்றால் இப்படத்தை தான் உதாரணம் காட்டுவார்கள். புகைப்படம் எடுத்த நேரம் பசியில் தவித்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாமே' என்ற சர்ச்சை எழ, பின்னாளில் குற்ற உணர்வால் கெவின் கார்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கற்பிழந்த இந்திய ஆர்மி !

மணிப்பூர் பெண்களை இந்திய ராணுவப் படை கற்பழித்தது என்று மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாண போராட்டம் நடத்தினர். இது போல் எந்தவொரு தேசத்திலும் நடந்தது இல்லை. இந்த போராட்டம் இந்திய ராணுவத்தை உலக அரங்கில் கற்பிழக்க செய்தது.

பிரபாகரன் இல்லை !

"பிரபாகரன் இல்லை..  இல்லை.. ஆனால் பிரபாகரன் தான்" என்று இலங்கை அரசு  காட்டிய பிரபாகரனின் மரணப் புகைப்படம்  வெளிவந்த நிமிடம் பல கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பியது. சர்வதேச ஊடகங்கள் அப்புகைப்படத்தின் மீதான ஆய்வை நடத்தின. இதுவரை அதை பற்றிய தெளிவான தகவல் இல்லை.

ஆப்கானை தகர்க்கும் அமெரிக்க உடைப்பு !


செப்டம்பர் 11,2001 சர்வதேச தீவிரவாதத்தின் மீதான பார்வை உக்கிரமான நாள். அன்று தான் உலக வர்த்தக மையமாக கருதப்படும் 'ட்வின் டவர்ஸ்' மீது அல்கொய்தா இயக்கம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. அது அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது என்றே சொல்லலாம். அடுத்த சில நாட்களுக்கு அந்த புகைப்படமே உலக ஏடுகளின் பக்கங்களை ஆக்கிரமித்தன.  அன்று ஆடிப்போன அமெரிக்கா, பின்லேடனை கொன்றதோடு, இன்று வரை ஆப்கானையும் அம்மக்களையும் மெல்ல மெல்ல தகர்த்து கொண்டிருக்கிறது.

நெஞ்சில் புதைந்த அணுக்குண்டு


இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுக்குண்டே உலகில் அணுக்குண்டால் ஏற்பட்ட முதல் தாக்கம். அந்த அணுவின் விஷம் அம்மக்களை பலவாறு பாதித்தது. .கருவை அழித்தது, ஊனமாக பிறக்க வைத்தது, தோலை கருக்கியது, கதிர்வீச்சு நோய்களை உண்டாக்கியது. இந்த அணுக்குண்டு வீசப்பட்ட காட்சி ஒவ்வொரு ஜப்பானியன் நெஞ்சிலும் இடம் பெற்றிருக்கும். அணுக்குண்டு என்றுமே ஆபத்தானது என்பதை இப்புகைப்படம் தன்னுள் எப்போதும் புதைத்திருக்கும்
.

                                                                                                                            - நன்றி விகடன்

                                                                                                   

No comments:

Post a Comment